Tuesday, February 2, 2010

விஷ்ணு புராணம் - 70

04_14. அனமித்ரனுக்கு சினியும், அவனுக்கு ஸத்யகனும், அவனுக்கு யுயுதானன்(ஸாத்யகி), அவனுக்கு ஸஞ்ஜயன், அவனுக்குக் குணி, அவனுக்கு யுகந்தரன் என்பவனும் பிறந்தனர். இவர்களே சைநேயர்கள். இந்த வம்சத்தில்தான் வ்ருஷ்ணியும், அவன் பிள்ளைகள் ச்வபல்கன், சித்ரகன். இந்த ச்வபல்கனுக்கும், காந்தீனிக்கும் பிறந்தவனே அக்ரூரன். ச்வபல்கனுக்கே இன்னொரு மனைவியிடம் உபமத்கு என்பவன் பிறந்தான். இவனுக்கு ம்ருதாம்ருதன், விச்வன், அரிமேஜயன், கிரிக்ஷத்ரன், உபக்ஷத்ரன், சத்ருக்னன், அரிமர்தனன், தர்மத்ருக், த்ருஷ்டதர்மன், கந்தமன், ஓஜவாஹன், ப்ரதிவாஹன் என்ற பிள்ளைகளும், ஸுரா என்ற பெண்ணும் பிறந்தனர். அக்ரூரனுக்கு தேவவான், உபதேவன் என்ற பிள்ளைகளும், அவன் தம்பி சித்ரகனுக்கு ப்ருது, விப்ருது முதலானோரும் பிறந்தனர்.

முன்கதையில் பார்த்த ஸத்வதன் பிள்ளையான அந்தகனுக்குக் குகுரன், பஜமானன், சுசி, கம்பளன், பர்ஹிஷன் என்பவர்கள் பிள்ளைகள். குகுரனுக்கு த்ருஷ்டனும், அவனுக்குக் கபோதரோமாவும், அவனுக்கு விலோமாவும், அவனுக்கு அனுவும் (தும்புருவின் தோழன்), அவனுக்கு ஆனகதுந்துபியும், அவனுக்கு அபிஜித்தும், அவனுக்குப் புனர்வஸுவும், அவனுக்கு ஆஹுகனும், ஆஹுகி என்ற புத்ரியும் பிறந்தனர். ஆஹுகனுக்குத் தேவகன், உக்ரஸேனன் இருவரும், தேவகனுக்குத் தேவவான், உபதேவன், ஸஹதேவன், தேவரக்ஷிதா என்ற நால்வரும், வ்ருகதேவா, உபதேவா, தேவரக்ஷிதா, ஸ்ரீதேவா, சாந்திதேவா, ஸஹதேவா, தேவகி என்ற ஏழு பெண்களும் பிறந்தனர். இந்த எழுவரையும் க்ருஷ்ணன் மணந்தான்.

உக்ரஸேனனுக்குக் கம்ஸன், ந்யக்ரோதன், ஸுனாமா, அனகாஹ்வன், சங்கு, ஸுபூமி, ராஷ்ட்ரபாலன், யுத்ததுஷ்டி, ஸுதுஷ்டிமான் என்ற புத்ரகளும், கம்ஸை, கம்ஸவதீ, ஸுதனு, ராஷ்ட்ரபாலிகை என்ற புத்ரிகளும் உண்டு.

ஸத்வதன் மகனான அந்தகனின் பிள்ளைகளில் மற்றொருவனான பஜமானனுக்கு விதூரதனும், அவனுக்கு சூரனும், அவனுக்கு சமீயும், அவனுக்கு ப்ரதிக்ஷத்ரனும், அவனுக்கு போஜனும், அவனுக்கு ஹ்ருதிகனும், அவனுக்கு க்ருதவர்மா, சததனு, தேவார்ஹன், தேவகர்பன் முதலானோரும், தேவகர்பனுக்கு சூரனும்(தேவபீடன்) பிறந்தனர். இவனுக்கும் மாரிஷைக்கும் பிறந்தவர்களே வஸுதேவன், தேவபாகன், தேவச்ரவன், அஷ்டகன், ககுச்சக்ரன், வத்ஸதாரகன், ஸ்ருஞ்ஜயன், ச்யாமன், சமிகன், கண்டூஷன் என்ற பத்து புதல்வர்கள். இவர்களைத் தவிர ப்ருதை, ச்ருதஸேவை, ச்ருதகீர்த்தி, ச்ருதச்ரவஸ், ராஜாதிதேவி என்ற ஐந்து பெண்களும் சூரனுக்குப்(தேவபீடன்) பிறந்தவர்களே.

இந்த வஸுதேவருக்கே பகவான் பிறக்கப் போவதை அறிந்த தேவர்கள், இவர் பிறந்த தினத்தின் போதே ஆனகம், துந்துபி முதலான வாத்யங்களை (முரசு வகைகள்) முழங்கினர். ஆகையால் இவர் ஆனகதுந்துபி என்றும் வழங்கப்படுகிறார். வஸுதேவரின் தந்தையான சூரனின் நண்பன் குந்திக்குக் குழந்தைகள் எதுவும் இல்லாததால் சூரன் தன் மூத்த மகளான ப்ருதையை முறையாக அவனுக்குத் தத்துக் கொடுத்தான். இந்த ப்ருதையையே பாண்டு திருமணம் செய்து சொண்டார். இவள் யமன், வாயு, இந்த்ரன் இவர்கள் அருளால் யுதிஷ்ட்ரன், பீமஸேனன், அர்ஜுனன் என்ற மூவரைப் பாண்டுவின் பிள்ளைகளாகப் பெற்றாள்.

இந்த மூவரைத் தவிர இவள் கன்னிகையாக இருந்த போதே ஸூர்யனின் அருளால் கர்ணன் என்ற மகனையும் பெற்றிருந்தாள். கன்னிகையாக இருந்த போது பிறந்ததால் கர்ணனுக்கு கானீகன் என்ற பெயரும் உண்டு. இவர்களைத் தவிர பாண்டுவிற்கு மற்றொரு மனைவியான மாத்ரீயிடம் நாஸத்யன், தஸ்ரன் என்ற இரு தேவர்களின் அருளால் நகுல, ஸஹதேவன் என்ற இருவரும் பிறந்தனர். சூரனின் மற்றொரு பெண்ணாகிய ச்ருததேவாவை கரூச தேசத்து அரசனான வ்ருத்த வர்மா மணந்து தந்தவக்ரனைப் பெற்றான். ச்ருதகீர்த்தியை கேகயராஜன் மணந்து ஸந்தர்தனன் முதலான ஐந்து கேகயர்களை உண்டாக்கினான்.

ராஜாதிதேவி அவந்தி தேசத்தரசனை மணந்து விந்தன், அனுவிந்தனைப் பெற்றாள். ச்ருதச்ரவஸ் சேதி தேசத்தரசன் தமகோஷனை மணந்து சிசுபாலனைப் பெற்றாள். இந்த சிசுபாலனே முன்பு ஹிரண்யகசிபுவாக தைத்யர்களிடம் பிறந்து நரஸிம்ஹ அவதாரத்தின் போது கொல்லப்பட்டான். பின்பு மூவுலகையும் ஆட்சி செய்த தசகண்ட ராவணனாகப் பிறந்து, ராமரால் மடிந்ததும் இவனே. இப்போது மீண்டும் தமகோஷனுக்குப் பிள்ளையாகப் பிறந்து க்ருஷ்ணனிடம் பகைமை பாராட்டி, கடைசியில் அவராலேயே கொல்லப்பட்டு அவரிடமே லயமடைந்தான். ஆக விஷ்ணுவிடம் பக்தி, த்வேஷம் என்று எந்த விதத்தில் தொடர்பு வைத்துக் கொண்டாலும் உயர்ந்த ஸ்தானமே கிடைக்கும் என்பது உண்மை.

No comments:

Post a Comment