Sunday, February 21, 2010

விஷ்ணு புராணம் - 94

05_14. க்ருஷ்ணன் ஒரு நாள் மாலைப் பொழுதில் ராஸக்ரீடைக்குச் செல்ல எத்தனிக்கையில் அரிஷ்டன் என்ற ஒரு அஸுரன் கொடிய கரிய எருதின் உருவில் ஸூர்யன் போன்ற ஒளிப் பிழம்பான கண்களுடன், குளம்புகளால் பூமியைப் பிளந்து கொண்டு, நாக்கால் உதடுகளை நக்கிக் கொண்டு, வாலைத் தூக்கிக் கொண்டு அனைவரையும் பயமுறுத்திக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தான். கெட்டியான கழுத்தும், உயர்ந்த திமிளும் கொண்டு, பின் புறம் சாணம், மூத்திரம் இவைகளால் பூசப்பட்டு, பசுக்களையும் பயந்தோடச் செய்து கொண்டு வந்து கொண்டிருந்தான். காட்டில் முனிவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த இவன் முகத்தில் மரங்களை முட்டித் தள்ளியதாலுண்டான வடுக்கள் இருந்தன.

இப்படி ஒரு எருது ஓடிவருவதைக் கண்டு, அதனருகில் கூட போகமுடியாமல் கோகுலத்தில் எவரும் க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று கதறிக் கொண்டு ஓடினர். க்ருஷ்ணனும் இவர்களைக் காப்பதற்காக ஸிம்ஹநாதம் செய்து கொண்டே அதன் எதிரில் வந்தான். க்ருஷ்ணன் வயிற்றில் குத்திக் கிழிப்பதற்காக அந்த எருதும் தன் கூரிய கொம்புகளை நீட்டி கொண்டு ஓடிவந்தது. பயப்படாமல் தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு எருது அருகில் நெருங்கியதும் அதன் கொம்புகளைப் பிடித்து அதை அசைய விடாமல் செய்து, முழங்காலால் அதன் வயிற்றில் ஒரு உதை விட்டான் க்ருஷ்ணன். அதை பழைய துணியைப் பிழிவது போல் அடித்துப் பிழிந்து, அதன் ஒரு கொம்பையே பிடுங்கி, அதனாலேயே வாயில் ரத்தம் கக்கி இறக்கும் வரை அதை அடித்துக் கொன்றான் க்ருஷ்ணன். கோபர்கள் அவன் இறந்ததைக் கண்டு கண்ணனை மகிழ்ந்து கொண்டாடினர்.

No comments:

Post a Comment