Wednesday, February 3, 2010

விஷ்ணு புராணம் - 71

04_15. போன பிறவிகளிலும் இறைவனாலேயே தானே சிசுபாலன் கொல்லப்பட்டான். அப்போதெல்லாம் அவனுக்கு ஏன் மோக்ஷம் கிடைக்கவில்லை என்று மைத்ரேயர் பராசராச்சார்யாரைக் கேட்கிறார். முதலில் ஹிரண்யகசிபுவாகப் பிறந்த போது, நரஸிம்ஹரை ஒரு புண்யம் செய்த ப்ராணி என்றே நினைத்தான். பகவான் என்று அறியவில்லை. எனவே தான் அப்போது மோக்ஷம் பெறவில்லை. எனினும் பகவானால் கொல்லப்பட்டதால் மூவுலகையும் தன் பராக்ரமத்தால் ஆண்டு செல்வங்களையும், போகங்களையும் அனுபவிக்கத்தக்க ராவணனாகப் பிறந்தான். அப்போதும் காமவசப்பட்டு ஸீதையை அபஹரித்த போது, ராமனை மனிதனாகவே எண்ணினான். எனவே அப்போதும் மோக்ஷம் அடையவில்லை. பலனாக ஜகம் புகழும் சேதி குலத்தில் உதித்தான்.

இப்பிறப்பில் இவன் பகை நன்கு முற்றியது. அதன் விளைவாக தூங்கினாலும், நடந்தாலும், நின்றாலும், அமர்ந்தாலும் எப்போதும் க்ருஷ்ணனையே நினைத்து வந்தான். திட்டுவதற்காக க்ருஷ்ணனின் நாமங்களையும் உச்சரித்து வந்தான். அன்றலர்ந்த தாமரையிதழ் போன்ற கண்கள், சிவந்த பீதாம்பரங்கள், க்ரீடம், தோள் வளை, ஹாரங்கள், நான்கு கரங்களும், பஞ்சாயுதங்களும் என பெருமானின் திருத்தோற்றம் எப்போதும் அவன் நினைவை விட்டகலாதிருந்தது. இப்படி அவன் சொல், மனம் என்று எதுவும் இறைவன் தொடர்பை ஒரு க்ஷணமும் பிரியாதிருந்தது. இதனாலேயே சக்ரதாரி அவனைக் கொன்ற போது இப்பிறப்பில் பாபங்கள் அனைத்தும் தீர்ந்து அவருடனேயே ஐக்யமானான். இதுவே உன் கேள்விக்கு பதில்.

வஸுதேவருக்குப் பௌரவி, ரோஹிணி, மதிரை, பத்ரை, தேவகி எனப் பல மனைவிகள் இருந்தனர். இதில் ரோஹிணி பலராமன், சடன், சாரணன், துர்மதன் முதலான புத்ரர்களைப் பெற்றாள். பலராமர் ரேவதியிடம் விசடன், உல்முகன் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றார். சாரணனுக்கு ஸார்ஷ்டி, மார்ஷ்டி, சிசு, ஸத்யன், ஸத்யத்ருதி என்பவர் பிள்ளைகள். பத்ராச்வன், பத்ரபாஹு, துர்தமன், பூதன் முதலானோர் ரோஹிணியின் வம்சத்தில் பிறந்தவர்கள். மதிரைக்கு நந்தன், உபநந்தன், க்ருதகன் முதலானோர் பிறந்தனர். பத்ரைக்கு உபநிதி, கதன் முதலானோரும், வைசாலிக்கு கௌசிகனும் பிறந்தனர்.

தேவகிக்குப் பிறந்த கீர்த்திமான், ஸுஷேணன், உதாயு, பத்ரஸேனன், ருஜுதாஸன், பத்ரதேவன் என்ற முதல் ஆறு குழந்தைகளையும் கம்ஸன் கொன்று விட்டான். தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை யோகநித்ரை என்ற தேவதை விஷ்ணுவின் ஆணையால் நள்ளிரவில் எடுத்து ரோஹிணியின் கர்ப்பத்தில் வைத்து விட்டது. இதனால் ரோஹிணிக்கு அப்போது பிறந்த பலராமனுக்கு ஸங்கர்ஷணன் (இழுத்துக் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டவன்) என்ற பெயருண்டு. எட்டாவதாகத் தேவகிக்கு ப்ரஹ்மா முதலானோர் வேண்டுதலுக்கிணங்க பூபாரம் தீர்ப்பதற்காகத் தானே உண்டானார். அவருடைய ஆக்ஞையால் யோகநித்ரை நந்தகோபனின் பத்னி யசோதையின் கர்ப்பத்தையடைந்தாள்.

ஒரு நல்ல வேளையில் தானும் அவதரித்தார். அப்போது உலகெங்கிலும் சுப ஸகுனங்கள் தோன்றின. எவர்க்கும் மனது பயங்களின்றி லேசானது. அதர்மங்கள் அழிந்தன. இந்த க்ருஷ்ணனுக்கு ருக்மிணி, ஸத்யபாமா, ஜாம்பவதி, சாருஹாஸினி முதலான எட்டு முக்ய பத்னிகள் உட்பட மொத்தம் பதினாறாயிரத்து நூற்றி ஒன்று பத்னிகளும், ப்ரத்யும்னன், சாருதேஷ்ணன், ஸாம்பன் முதலான பதிமூன்று முக்ய புத்ரர்களுடன் லக்ஷத்தெண்பதாயிரம் புத்ரர்களும் இருந்தனர். ருக்மிணியின் புதல்வன் ப்ரத்யும்னன் ருக்மியின் பெண் ருக்மவதியை மணந்து அனிருத்தனைப் பெற்றான். இவனுக்கும் ருக்மியின் பௌத்ரியான ஸுபத்ரையை மணந்து வஜ்ரனைப் பெற்றான். அவனுக்கு ப்ரதிபாஹுவும், அவனுக்கு ஸ்சாருவும் பிறந்தார்கள்.

இப்படி ஆயிரக்கணக்கில் வளர்ந்த இந்த யது குலத் தோன்றல்களை எண்ண பல நூறாண்டுகளும் போதாது. இந்தக் குழந்தைகளுக்கு வில் வித்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களே மூன்று கோடியே எண்பத்தெட்டு லக்ஷம் பேர்கள். இவர்கள் தலைவன் ஆஹுகன் என்ற ஒருவனே பதினாயிரம் பதினாயிரம் லக்ஷம் பேரோடு வாழ்கிறான் என்றால் மொத்தமாக இவர்களை யாரால் கணக்கிட முடியும். முன்பு தேவாஸுர யுத்தத்தில் இறந்த அஸுரர்களே மனிதர்களாகப் பிறந்தனர். இவர்களை அழிக்கவே தேவர்கள் யாதவ குலத்தில் நூற்றி ஒன்று குலங்களில் பிறந்தனர். இவர்கள் அனைவரும் க்ருஷ்ணனின் சொல் கேட்டு, அவன் தலைமையிலேயே நடந்து வ்ருத்தி அடைந்தனர். இந்த வ்ருஷ்ணி வம்ச வரலாற்றைக் கேட்பவர்கள் அனைத்துப் பாபங்களும் தீர்ந்து விஷ்ணு பதத்தை அடைவர்.

No comments:

Post a Comment