Monday, February 1, 2010

விஷ்ணு புராணம் - 64

04_08. புரூரவஸ்ஸின் மூத்த மகன் ஆயு ராஹுவின் மகளை மணந்து, நஹுஷன், க்ஷத்ரவ்ருத்தன், ரம்பன், ரஜி, அனேனஸ் என்ற ஐந்து புத்ரர்களைப் பெற்றான். க்ஷத்ரவ்ருத்தனுக்கு ஸுஹோத்ரனும் அவனுக்கு காச்யன், காசன், க்ருத்ஸமதன் என்ற மூவரும் பிறந்தனர். க்ருத்ஸமதனுக்கு சௌனகர் பிறந்தார். இவர் தான் நான்கு வர்ணங்களை உண்டாக்கினார். காச்யனுக்குக் காசேயன் என்ற காசீராஜனும், அவனுக்கு ராஷ்ட்ரனும், அவனுக்குத் தீர்க்கதபஸ்ஸும், அவனுக்குத் தன்வந்த்ரியும் பிறந்தனர். இவர் இந்த்ரியங்களை ஸ்வாதீனமாக வைத்திருந்தார். இவர் முன்பு க்ஷீர ஸாகரத்தில் தோன்றிய போதே "காசிராஜ கோத்ரத்தில் பிறந்து எட்டு வகையான வைத்ய சாஸ்த்ரங்களை விளங்கச் செய்வாயாக. யாகங்களிலும் ஹவிர்ப் பாகத்தைப் பெறுவாயாக" என்று பரமனால் அருளப் பெற்றிருந்தார்.

தன்வந்த்ரிக்குக் கேதுமான், அவனுக்குப் பீமரதன், அவனுக்குத் திவோதாஸன், அவனுக்கு ப்ரதர்தனன், அவனுக்கு அலர்கன் என்பவனும் பிறந்தனர். ப்ரதர்தனனுக்கு சத்ருஜித், வத்ஸன், ருடத்வஜன், குவலயாச்வன் என்று பெயர்கள் உண்டு. இவன் மகன் அலர்கனைப் போல் அறுபத்தாறாயிரம் வருஷங்கள் பூமியை ஆண்டவர் வேறு எவருமில்லை. இவனுக்கு ஸன்னதியும், அவனுக்கு ஸுகேதுவும், அவனுக்கு தர்மகேதுவும், அவனுக்கு ஸத்யகேதுவும், அவனுக்கு விபுவும், அவனுக்கு ஸ்வவிபுவும், அவனுக்கு ஸுகுமாரனும், அவனுக்கு த்ருஷ்டகேதுவும், அவனுக்கு வீதிஹோத்ரனும், அவனுக்கு பார்கனும், அவனுக்கு பார்கபூமியும் பிறந்தனர். இவனால் நான்கு வர்ணங்களும் நன்கு நடைபெற்றன.

No comments:

Post a Comment